தர்மம், ஒழுக்கத்தை தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து மனித நேயம், நீதி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப அர்ப்பணித்த நபிகளாரின் பிறந்த நாள் முழு உலகிலும் கொண்டாடப்படுகின்றது.இன்றைய நாளில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மீலாத் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக புத்தசாசன மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஹம்மத் நபி அவர்கள் 40 வயதாக இருந்தபோது இறைவன் நபியாகத் தேர்ந்தெடுத்தான்.மேலும் அவர் இஸ்லாத்தின் இறுதி நபி என்று அறியப்படுகிறார். இறைகட்டளைகளை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்துவது அவரின் போதனைகளாக இருந்தது. இலங்கை முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப இனம், மதம், சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இல்லாமல் முன்னோடியாக செயற்படுவது தேசத்தின் பாக்கியம் எனலாம்.
வருடாந்தம் கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதமில்லாமல் மிதமான வழியில் அமைதி மற்றும் தியாகத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த புரிந்துணர்வுடன் பணியாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.