இலங்கை அதிபர் சேவையின் தரம் III-க்கான 4,718 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான இடைக்கால தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய மேலும் சில மனுக்களை வாபஸ் பெறுவதற்கும் மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தினால், இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் நேற்று(27) நீக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.