பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவலர்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய ஏப்ரல் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பான பிரேரணை எப்ரல் 01ஆம் திகதி 14ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தனிநபர் சட்டமூலமான சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.
இதன் பின்னர் மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.
ஏப்ரல் 02ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை வங்கித்தொழில் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான 2358/70 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, பெறுமதி சேர் வரி சட்டத்தின் 2363/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான 2370/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.