நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த பகுதிகளில், வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (17) தங்கல்ல முதல் காலி வரையுள்ள பல சுற்றுலாத் தளங்களுக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
இதன்போது சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்ற ஜனாதிபதி, ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன்போது சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி,
உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் அவர் கேட்டறிந்தார்.
கொவிட்19 – பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் சரிவை சந்திருந்த நிலையில், அரசாங்கத்தின் புதிய திட்டமிடல்களின் பலனாக தற்போது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டில் 7,489,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்திருந்தனர், 2022 உடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்புத் தொகையாகும்.
2017 இல், 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் அந்த இலக்கையும் கடந்து செல்லும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டமிடலை அரசாங்கம் கொண்டுள்ளது.
அதேபோல் நாளாந்தம் 500 டொலர்களைச் செலவிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாறாக, அதனை விடவும் அதிக தொகையைச் செலவிடக்கூடிய உயர்மட்ட சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.