தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவில் இம்முறை பயிர்செய்கை பண்ணப்பட்ட சுமார் 5250 ஏக்கர்களுக்கும் அதிகமான பெரும்போக நெல் அறுவடை தற்போது பரவலாக இடம்பெற்றுவருவதாக தோப்பூர் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார். முன்னம்போடிவெட்டை, மூதூர் கிளிவெட்டி, சம்பூர் ஆகிய கமநல சேவை நிலைய பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் அறுவடையும் இங்கு நடைபெற்றுவருகின்றன. தோப்பூர் கமநல சேவைப்பிரிவில் நெல் அறுவடையானது எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
கீரிச்சம்பா நெல் ஏக்கர் ஒன்றுக்கு 25, 30 மூடை நெல் விளைவு பெறப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் அறுவடை நடைபெறும் இடத்துக்கு லொறிகளில் வரும் வெளியூர் தனியார் நெல் வியாபாரிகள் 69 கிலோ கிராம் நிறை கொண்ட ஒரு மூடை நெல்லை 9200 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .
வெளியிடங்களிலிருந்து இங்கு வரும் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது.
(தோப்பூர் தினகரன் நிருபர்)