Saturday, May 4, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
February 5, 2024 7:05 am 0 comment

பின்பு தந்தையார் ஸ்நானம் பண்ணும் பொழுது, பிள்ளையார் அவரைக் காணாது இறையளவாயினுந் தரியார் என்னும் நிலைமை தலைக்கீடாக, பரமசிவனுடைய திருவடிகளை வழிபட்ட முன்னுணர்ச்சி மூள கரையினின்று கண்களைக் கண்ணீர் ததும்பும்படி கைகளினாலே பிசைந்து அதரந்துடிக்க, எவ்வுலகங்களும் குதூகலிக்க, பொருமி அழுதார். தம்முடைய முற்சார்பை அறிந்தோ, பிள்ளைமையானோ, சுவாமியுடைய திருத்தோணிச்சிகரத்தைப் பார்த்து, “அம்மே, அப்பா” என்று அழைத்தழைத்து அழுதார், அப்பொழுது சுத்தசாட்குண்ணிய பரிபூரணராகிய தோணியப்பர் அவருடைய முற்றிருத்தொண்டை நினைந்து, அவருக்கு அருள் செய்தற்குத் திருவுளங்கொண்டு பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் எழுந்தருளி, தீர்த்தக்கரையை அடைந்து உலகமாதாவாகிய உமாதேவியாரை நோக்கி, “உன்னுடைய முலைப்பாலைப் பொன் வள்ளத்திலே கறந்து இவனுக்கு ஊட்டு” என்று அருளிச் செய்தார். பரிபக்குவர்களாகிய ஆன்மாக்களிடத்திலே சகசமாயுள்ள மலத்தை நீக்கி அவர்களைச் சிவத்தோடு இரண்டறக் கலப்பித்தருளும் பராசத்தியாகிய உமாதேவியார் சென்றணைந்து, தம்முடைய திருமுலைப்பாலப் பொன்வள்ளத்திலே கறந்து, சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருடைய கண்ணீரைத் துடைத்து, கையிலே கொடுத்து ஊட்ட, சிவபெருமான் அழுகை தீர்த்து அநுக்கிரகஞ் செய்தருளினார்.

அப்பிள்ளையார் சர்வான்மாக்களுக்கும் பரமபிதாமாதாக்களாகிய சிவன் சக்தி இருவராலும் ஆளப்பட்ட மையினாலே ஆளுடைய பிள்ளையார் என்னும் பெயரும், அரிபிர மேந்திராதிதேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எட்டாத சிவஞானத்தோடு சம்பந்தஞ்செய்தலினாலே திருஞானசம்பந்தமூர்த்தி என்னும் பெயரும் உடையராயினார்.

சிவபாதவிருதயர் சிறிதுபொழுதிலே தம்முடைய நியமங்களை முடித்துக் கொண்டு கரையிலேறி, பரஞானக் கண்ணினாலே சிவத்தைத் தரிசித்து அதில் அதீதப்பட்டு நின்ற ஆளுடைய பிள்ளையாரை நோக்கி, “நீ யார் தந்த பாலை உண்டாய்” என்று கோபித்து,

(​தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT