தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் அப்பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாயிஸ் முஸ்தபா தலைமையில் 10ஆம் திகதி (சனிக்கிழமை) 3 அமர்வுகளும், 11ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) 3 அமர்வுகளுமாக மொத்தம் 6 அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
முதலாவது நாளான சனிக்கிழமையில் முதலாவது அமர்வில் கலை, கலாசாரப்பீடத்தைச் சேர்ந்த 342 மாணவர்களும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடங்களைச் சேர்ந்த 355 மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர். மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞானபீடம், பொறியியல்பீடம் மற்றும் தொழில்நுட்பபீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர்.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையில் நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 314 பட்டதாரிகளும், ஐந்தாவது அமர்வில் கலை, கலாசாரப் பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.
ஆறாவது அமர்வில் கலை, கலாசார மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.
1,414 உள்வாரி பட்டதாரிகளும், 711 வெளிவாரி பட்டதாரிகளும் பட்டம் பெறவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்