தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் நமீபிய அணியை 77 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர் அணி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிம்பர்லியில் நேற்று (24) நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை இளையோர் அணி 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்கே சுருண்டது. சுப்புன் வாத்துகே ஆட்டமிழக்காது பெற்ற 59 ஓட்டங்கள் மூலமே கௌரவமான ஓட்டங்களை பெற முடிந்தது.
எனினும் பதிலெடுத்தாடிய நமீபிய இளையோர் அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்ததோடு தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 27 ஓவர்களில் 56 ஓட்டங்களுக்கே சுருண்டது. கடைசி வரிசையில் வந்த இரு வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை இளையோர் அணி சார்பில் விஷ்வ லஹிரு மற்றும் ருவிஷான் பெரேரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் ருவிஷான் பெரேரா 5 ஓவர்களில் 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தே 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை இளையோர் அணி இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை அணி முன்னதாக முதல் போட்டியில் சிம்பாப்வே அணியை வீழ்த்தியதோடு சி குழுவின் கடைசி போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (28) அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.