மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் நினைவேந்தல் நிகழ்வும் புத்தக அறிமுக விழாவும் அண்மையில் மாத்தறை ‘ஸனஸ’ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமிய்யா பரிபாலன சபைத் தலைவர் யாகூத் நளீம் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் பாரியார் புஷ்ரா ஸலாஹுத்தீன் பங்கேற்றார்.
விசேட அதிதிகளாகவும் பேச்சாளர்களாகவும் ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் மொஹம்மட், மிஷ்காத் ஆய்வு மையத்தின் பணிப்பாளர் உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மன்சூர், ராபிததுந் நளீமிய்யீன் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் லாபிர் மதனி ஆகியோர் பங்கேற்றனர்.
நூல் அறிமுக உரையை ஜாமிஆ நளீமிய்யா விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஹசன் சுலைமானும் வரவேற்புரை மற்றும் தலைமை உரையை தென்பிராந்திய ராபிததுந் நளீமிய்யீன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மஷாயிர் நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் இனாயதுள்ளாஹ் ஊர் சார்பில் உரை நிகழ்த்தினார். மர்ஹூம் கலாநிதி சுக்ரி பற்றி அஷ்ஷெய்க் இன்சாப் சலாஹுதீனினால் தயாரிக்கப்பட்ட ஒளி – ஒலி காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசளிக்கப்பட்டன. கலாநிதி மர்ஹூம் சுக்ரியின் பாரியாரும் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார். அத்துடன், தென்பிராந்தியத்தில் 60 வயதை தாண்டிய மூத்த நளீமீக்கள் 8 பேர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேட நிகழ்வாக மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் பெயரால் ஒரு புலமைப் பரிசுத்திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தென் பிராந்தியத்திலிருந்து இம்முறை நளீமிய்யாவுக்கு தெரிவு செய்யப்பட்ட 8 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களை கலாநிதி சுக்ரியின் மருமகன் பகார்தீன் மற்றும் யாகூத் நளீம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.