யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் இடம்பெற்று வரும் நிலையில் பலரும் பட்டம் விட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
பல விதமான பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்டு மகிழும் இளைஞர்கள் , சில வேளைகளில் தாமும் பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை தைப்பொங்கல் தினத்தன்று , வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்ட திருவிழா நடைபெற்றது. அதன் போது முப்பரிமாண பட்டங்கள் பல பறக்க விடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற இளைஞன் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.
பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டத்துடன் தாமும் சேர்ந்து பறக்கும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் பலர் மகிழ்ந்து வரும் நிலையில் , இவ்வாறான ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என பலரும் அந்த காணொளிக்கு கருத்திட்டு வருகின்றனர்.
இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்க விட சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்தில் உயிர்தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். விசேட நிருபர்