தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபான சாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
தைப்பொங்கல் தினமானது தமிழர் நன்றி பகரும் நன்நாளென்பதுடன், அன்றையநாள்
புனிதமானதாகும். ஆகையால் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் பதுளையில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்து, கடிதம் அனுப்பி வைத்தார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நுவரெலியா மற்றும் பதுளையிலுள்ள மதுபான சாலைகளில் தமிழர்களே அதிகளவாக தொழில் புரிகின்றனர். அவர்களும் தைப்பொங்கலை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கும் தைத்திருநாளை புனிதமாக கடைப்பிடிப்பதற்கும் வழி செய்ய வேண்டும். ஆகையால் தைப்பொங்கலன்று நுவரெலியா, பதுளையில் மதுபான சாலைகளை ஒரு தினத்துக்கு மூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.