பஸ் கண்ணாடிகளை உடைத்து சாரதியை வாளால் வெட்டிய மர்மகும்பல் தப்பிச் சென்ற நிலையில் வாள்வெட்டுக்கு இக்கான பஸ் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (09) பருத்தித்துறை நகரில் இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மருதங்கேணி வடக்கு, தாளையடியைச் சேர்ந்த 43 வயதான விஸ்வலிங்கம் தேவகுமார் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பருத்திதுறை – காட்டைக்காடு வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் மேற்படி பஸ்வண்டியின் சாரதி பருத்தித்துறை நகர் பகுதியில் பஸ் வண்டியை நிறுத்திவிட்டு அதற்குள் படுத்திருந்துள்ளார்.
இரவு முகத்தை துணியால் மறைத்த நிலையில் வந்த நால்வர் பஸ் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற சாரதியை துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த பஸ் சாரதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாகர்கோவில் விஷேட நிருபர்