சீனாவுடனான உறவுகள் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
தாய்வான் சீனாவுடன் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது என்று சீனத் தலைவர் தெரிவித்துள்ள பின்புலத்தில் தாய்வான் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாய்வானில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் சூழலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. சீனாவுடனான உறவுகளைப் பேண ஜனநாயகக் கொள்கை மிக முக்கியமானது. அதனால் எமது மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா தாய்வானின் தேர்தல் முடிவுகளை மதிக்க வேண்டும். எமது நீரிணை பகுதியில் அமைதியையும் ஸ்தீரத்தன்மையையும் பேணும் பொறுப்பு இரு தரப்புக்கும் உள்ளது. எமது மக்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் எங்களுக்கு அமைதியுடன் கண்ணியமும் வேண்டும். எமது நிறுவனங்கள் உலகளாவிய மற்றும் பல்வகைமை கொண்ட நிறுவனங்களாக நோக்கப்பட வேண்டும்” என்றார்.
தாய்வானின் பாதுகாப்பை நவீனப்படுத்தி மேம்படுத்துவற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல் திட்டமும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.