வடமத்திய மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டங்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மேற்கொண்டு வருகின்றார்.
வடமத்திய மாகாண ஆளுநர் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பொலன்னறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் கடந்த (05) இடம்பெற்றது.இலங்கையில் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாய நிலைமை உருவாகியுள்ளதெனவும் சுகாதார திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு இலங்கையில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 58 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் பொலன்னறுவை மாவட்டத்தில் 438 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன் ஒரு டெங்கு மரணமும் பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் தமன்கடுவ, ஹிங்குரன்கொட மற்றும் மெதிரிகிரிய பிரதேசங்களில் டெங்கு அதிகளவில் பரவியுள்ளது. டெங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சுமார் 75% அரச நிறுவனங்கள் காணப்படுகின்றது.
எனவே, டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (08) தொடக்கம் 14 ஆம் திகதி வரை ஒரு வார காலம் டெங்கு தடுப்பு வாரமாக பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
( அநுராதபுரம் மேற்கு, கல்நேவ தினகரன் விசேட நிருபர் )