Monday, April 29, 2024
Home » லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் அல் அரூரி படுகொலை

லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் அல் அரூரி படுகொலை

- பலஸ்தீனத்தை தாண்டி போர் அபாயம்

by gayan
January 4, 2024 6:00 am 0 comment

ஈரான், ஹிஸ்புல்லாவின் கண்டனத்திற்கு இடையே அமைதிகாக்க ஐ.நா கோரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றின் மூலம் ஹமாஸ் அமைப்பின் பிரதித் தலைவர் சலேஹ் அல் அரூரி கொல்லப்பட்டது காசா போர் பலஸ்தீனத்தை தாண்டி பரவும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் போரை ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஹமாஸ் அரசியல் தலைவராக அரூரி உள்ளார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி ஒன்றான முஷரபியாவில் உள்ள ஹமாஸ் அலுவலகத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அரூரி கொல்லப்பட்டுள்ளார்.

ஐவருடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பிலேயே அரூரி கொல்லப்பட்டதாக லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்தது. இதில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பில் அரூரி கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹமாஸ் அதிகாரிகளில் ஒருவரான பசம் நயீம், தமது ஆயுதக் குழுவின் மேலும் இரு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஹமாஸ் தலைமைக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையிலேயே சலேஹ் அல் அரூரி மரணித்தார்’ என்று இஸ்ரேலிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டிருப்பதோடு, இது லெபனான் இறைமை மீதான தாக்குதல் என்று ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் லெபனானை மோதலுக்கு இழுப்பதாக லெபனான் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையின் முக்கிய புள்ளியாக இருந்த அரூரி, ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாவார். லெபனானில் அவர் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான தொடர்புகளை பேணுபவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த படுகொலையைச் செய்ததாக உறுதி செய்வதை தவிர்த்துக் கொண்ட இஸ்ரேலிய பேச்சாளர் மார்க் ரெகேவ், ‘யார் இதனைச் செய்தாலும் அது லெபனான் மீதான தாக்குதலாக இருக்காது’ என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

எனினும் லெபனான் மண்ணில் இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த ஒரு படுகொலைக்கும் ‘கடுமையான பதிலளிக்கப்படும்’ என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா எச்சரித்துள்ளார்.

காசாவில் கடந்த ஒக்டோரில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானுடனான இஸ்ரேலின் தெற்கு எல்லையில் லெபனானின் பலம்மிக்க ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிய படைக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

அரூரி கொல்லப்பட்டதை அடுத்து மர்ஜ் அருகே ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்ததாக ஹிஸ்புல்லா கூறியது.

இஸ்ரேலியர்கள் மீது அரூரி கொடிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தது. எனினும் கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்காற்றி வந்ததாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

‘உயிர் தியாகத்திற்கு

காத்திருக்கிறேன்’

ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் தீன் அல் கஸ்ஸாம் அமைப்பின் இணை நிறுவனராக அரூரி இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. காசாவுக்குள்ளேயோ அல்லது வெளியேயோ ஹமாஸ் தலைமைகளை ஒழிப்பதாக கடந்த ஓகஸ்ட் மாதம் இஸ்ரேல் எச்சரித்தபோது அதற்கு பதிலளித்த அரூரி, ‘நான் உயிர் தியாகம் செய்ய காத்திருப்பதோடு நான் அதிக காலம் வாழ்ந்து விட்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் பிரதான ஆதரவாளராக உள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நாஸர் கனானி கூறும்போது, ‘அரூரியின் படுகொலை பலஸ்தீனத்தில் மாத்திரமன்றி பிராந்தியத்தில் மற்றும் உலகெங்கும் சுதந்திரத்தை நாடுபவர்கள் இடையே சந்தேகத்திற்கு இடமின்றி எழுச்சியையும் சியோனிஸ ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிராக போராடுவதற்கும் தூண்டுகிறது’ என்றார்.

அரூரியின் படுகொலையை கண்டித்து ரமல்லா மற்றும் மேற்குக் கரையில் உள்ள மற்ற நகரங்களில் கூடிய நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் ‘பழிதீர்ப்போம், பழிதீர்ப்போம், கஸ்ஸாம்!’ என்று கோசமெழுப்பினர்.

‘இந்தத் தாக்குதல் லெபனான் இறைமையை மீறும் கோழைத்தனமான…பயங்கரவாதச் செயல் என்பதோடு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் வட்டத்தை அதிகரித்துள்ளது’ என்று ஹமாஸ் தலைவர் ஹனியே கூறினார்.

இந்தப் படுகொலையைக் கண்டித்த லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, லெபனானை மேலும் போருக்குள் இழுக்கு செயலாக உள்ளது என்றார். அது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புகார் செய்யத் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பதற்றம் தீவிரம் அடையும் அச்சம் அதிகரித்துள்ளது. பெய்ரூட்டில் ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து பதற்றம் தீவிரம் அடையும் சாத்தியம் பற்றி ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் திட்டம் தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எல்லைகளை கண்காணிக்கும் இந்த அமைதிகாக்கும் திட்டத்தின் பேச்சாளர் கன்டிஸ் ஆர்டியேல் கூறியதாவது, ‘அனைத்து தரப்பினரும் தங்கள் கொந்தளிப்பை நிறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம், மேலும் செல்வாக்கு உள்ள எந்தவொரு தரப்பும் அமைதிகாக்கும்படி வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர் ஒருவரான பென்னி கானஸுடனான உரையாடலில், லெபனானில் போர் சூழல் ஒன்று பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

எனினும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராய் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

22,000ஐ தாண்டிய உயிரிழப்பு

இதேவேளை காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் 207 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு உறுதி செய்தது. இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 22,313 ஆக அதிகரித்துள்ளது.

57,296 பேர் காயமடைந்திருப்பதோடு 7,000 பேர் வரை காணாமல்போயுள்ளனர். அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. காசாவில் மூன்று மாதங்களாக நீடிக்கும் குண்டு மழை காரணமாக அந்த குறுகிய நிலப்பகுதியின் மக்கள் தொகையில் நான்கு வீதத்தினர் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணாமல்போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை அடுத்து மக்கள் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இருப்போரை காப்பாற்றுவதற்காக அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.

‘இதுவரை 12 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். சிறுவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்களில் எனது ஒரு மாத மகனும் உள்ளான். அவன் இஸ்ரேலுக்கு என்ன செய்தான்?’ என்று காசி தர்விஷ் என்பவர் கேள்வி எழுப்பினார். ‘எனது மற்ற மகனுக்கு ஐந்து வயதாகிறது. அவனும் உயிர்த்தியாகம் செய்துள்ளான்’ என்றார்.

மேலும் தெற்காக கான் யூனிஸில் இஸ்ரேல் தமது தலைமையத்தின் மீது இரு முறை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டது. இதனால் ஐவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

‘அவர்கள் தெற்காக செல்லும்படி கூறினார்கள். அங்கு பாதுகாப்பானது என்றும் கூறினார்கள். ஆனால் அவர்கள் பொய்யர்கள்’ என்று செம்பிறை சங்கம் மீதான தாக்குதலில் காயமடைந்து நாசர் மருத்துவமனையில் தரையில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகளை காண்பித்தபடி பாதி அல் அப்ஃ கூச்சலிட்டார்.

இந்தத் தாக்குதல்களை மனசாட்சி அற்றது என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக சாடியது. கான் யூனிஸில் நேற்றும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவில் உள்ள மக்களை தொடர்ந்து வெளியேறுவதற்கு உத்தரவிட்டு வரும் இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று போர் விமானங்கள் மூலம் வீசிய துண்டுப் பிரசுரத்தில் கான் யூனிஸின் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி குறிப்பிட்டுள்ளது.

‘தரைவழி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டபோது காசா நகரில் இருந்து கிசான் அல் நிஜார் பகுதிக்கு நான் வெளியேறினேன். ரபா நகர் மற்றும் கான் யூனிஸுக்கு இடையில் உள்ள கிசான் அல் நிஜார் முன்னர் பாதுகாப்பான இடமாக இருந்தது’ என்று யூனிஸ் என்பவர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி இணையதளத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

‘மூன்று நாட்களுக்கு முன் 87 தொகுதியில் இருந்து வெளியேறும்படி துண்டுப் பிரசுரம் கிடைத்தது. இன்று அதில் 83, 84 மற்றும் 86 தொகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நான் 85 தொகுதியில் இருக்கிறேன். அது மாத்திரம் தான் இந்த தொகுதியில் இல்லாத பகுதி. ஆனால் 86 தொகுதியுடன் இது மாத்திரமே வெளியேற்றப்படாத தொகுதியாக உள்ளது. குண்டு வீச்சுக்கு மத்தியில் வாழ்வது மிகக் கடினமானது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அனைவரும்போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் அடைக்கலம் பெற்றவர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT