ஐ.ம.ச. வடகொழும்பு பிரதான அமைப்பாளர் ராம் இரங்கல்
தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகரும் தே.மு.தி.க. நிறுவுனருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ் மக்களுக்கும் திரையுலகுக்கும் பேரிழப்பாகுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் ராம் நற்பணி மன்றத்தின் தலைவருமான கலாநிதி சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.
நடிகர் விஜயகாந்தின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்ததாவது,
“நடிகர் விஜயகாந் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்ட போது, அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றே நினைத்திருந்தோம். என்றாலும் மரணம் அவரையும் விடவில்லை. அவர் எப்போதும் ஏழை எளிய மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வந்தார்.
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் அகதிகளாக சென்ற போது, எமது மக்களின் நலனுக்காக பாடுபட்டதுடன், சட்ட மன்றத்திலும் குரல்கொடுத்தார். அவர் எப்போதும் கஷ்டப்படும் மக்களின் நலத்திட்டங்களுக்காக முன்னின்று செயற்பட்டதால் குறுகிய காலத்தில் அரசியலிலும் பிரபல்யமடைந்தார். அதனாலேயே அவர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்வடைய முடிந்தது. எனவே அவரின் இழப்பால் வாடும் மனைவி, பிள்ளைகள், கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்” என்றார்.