ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை ஐந்து சுற்றுலாப் பயணிகள் கப்பல்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் 6000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகப்பொறுப்பாளர் நேற்று (28) அறிவித்தார்.
‘Azamara Journey’ கப்பலின் ஊடாக கடந்த நவம்பர் மாதம் 620 சுற்றுலாப் பயணிகளும் நவீன அதிசொகுசு கப்பலான ‘Mein Schiff 5’ கப்பலினூடாக டிசம்பர் மாதம் 2200 சுற்றுலாப் பயணிகளும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்தது. இன்னொரு கப்பலான ‘Celebrity Millennium’ டிசம்பர் 05 மற்றும் 16 ஆம் திகதிகளில் 3500 சுற்றுலாப் பயணிகளுடனும் டிசம்பர் 19 ஆம் திகதி ‘Nautica’ 498 சுற்றுலாப் பயணிகளுடனும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த ஆண்டின் இன்றுவரை ஏறக்குறைய 22 சுற்றுலா பயணிகள் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சென்னை வழியாக வருகை தந்துள்ளது. இந்திய நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு விடுமுறை காலத்தில் சுற்றுலா வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் கப்பலான ‘எம்பிரஸ்’ ஜூன் முதல் செப்டெம்பர் வரை 7500 சுற்றுலா பயணிகளை அழைத்து வந்துள்ளது.
அதிசொகுசு கப்பல்களினுடாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடையும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஹம்பாந்தோட்டையிலுள்ள சுற்றுலா தலங்களை தரிசிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
சூழலுக்கு ஏற்ப சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் இதனூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்