தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றுப்பட்டு செயற்பட முன்வர வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளரினாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் தென்னிலங்கையில் இருந்து வந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வந்த போதிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்பது தான் வரலாறாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டிருக்குமாக இருந்தால் நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடி கூட ஏற்பட்டிருக்காது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய யுத்தம் தொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது கூட அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதாக பேச்சுவார்தர்தைகளை நடத்திய ஜனாதிபதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரும் ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை பற்றி ஆராயலாம் என தற்போது கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பாக இனிமேல் 2026 ஆம் ஆண்டு தான் கலந்துரையாடுவோம் என்பதே இதன் அர்த்தமாகும். குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காது எல்லாவற்றையும் 2026 ஆம் ஆண்டு வரை ஒத்திவைத்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.