ஐகோனிக் யூத்ஸ் – சிறிலங்கா அமைப்பு மற்றும் அக்கரைப்பற்று இளமாணி பட்டப்பயிலுனர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வருட உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான Adapting To Uni Life என்ற தலைப்பிலான விசேட செயலமர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில், அமைப்பின் தலைவர் முஹம்மட் தில்ஷான் வழிகாட்டலில், அமைப்பின் தவிசாளர் சிமாம் முஸ்தாக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ. சிப்லி மற்றும் விரிவுரையாளர்களான எம்.அப்துல் றஸாக், எம்.ஐ.பாத்திமா நிஹ்லா போன்ற துறைசார் நிபுணர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிமுகம், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும்?, பல்கலைக்கழத்திற்கு முன்னுள்ள காலப்பகுதியை திட்டமிடுவது எவ்வாறு?, அம்மாணவன் கொண்டிருக்க வேண்டிய ஆளுமைப்பண்புகள், அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களும், அவற்றை வெற்றிகொள்கின்ற வழிமுறைகளும், பல்கலைக்கழகங்களும் பெண்களும் போன்ற கருப்பொருட்களில் இச்செயலமர்வுகள் நடைபெற்றன.
அத்துடன், பல்கலைக்கழகங்களில் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களினால் அனுபவப்பகிர்வுக் கலந்துரையாடலும் இதில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இச்செயலமர்வில், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், வளவாளர்களாக கலந்து கொண்டவர்கள் இதில் கௌரவிக்கப்பட்டார்கள்.
இச்செயலமர்வில் ஐகோனிக் யூத்ஸ் அமைப்பின் அங்கத்தவர்கள், அக்கரைப்பற்று இளமாணிப் பட்டப்பயிலுனர் சங்க உறுப்பினர்கள் (UGAA), பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம்.றிஸ்வான்…
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)