Monday, April 29, 2024
Home » மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் கழகப் போட்டிகளில் களமிறங்கும் தனுஷ்க

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் கழகப் போட்டிகளில் களமிறங்கும் தனுஷ்க

by mahesh
December 23, 2023 7:54 am 0 comment

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்ட தடையை சிங்கள கிரிக்கெட் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் நிறைவேற்றுக் குழு நீக்கியுள்ளது.

இந்தத் தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் பிரதான கழகமட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரில் தனுஷ்க குணதிலக்கவால் விளையாட முடியும் என்று எஸ்.எஸ்.சி மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தனுஷ்க குணதிலக்க சிட்னியில் உள்ள டோனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியை மாத்திரம் கொண்ட வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட இந்த சம்பவத்தில் 32 வயதான குணதிலக்க கிழக்கு சிட்னியில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் வீட்டில் வைத்து ஆணுறை அணிவதற்கு மறுத்ததாகக் கூறப்பட்டது.

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். எனினும் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் எஸ்.எஸ்.சி அணிக்காக ஆடும் குணதிலக்க நுகேகொடை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இன்று மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

குணதிலக்க மீது இலங்கை கிரிக்கெட் சபை விதித்த தடை சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.சி கழகம் விதித்த தடையும் நீக்கப்பட்டிருப்பதால் அவருக்கு கழக மட்டப் போட்டிகளில் ஆட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ்க கடைசியாக 2020 ஆம் ஆண்டிலேயே எஸ்.எஸ்.சி அணிக்கு ஆடி இருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT