சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ளதால், கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 முதல் 2024.05.24 வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நடைபெறவுள்ளது. இதில்,கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் தற்காலிக அல்லது நிரந்தர வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரம் உரிய முறையில் பேணப்பட வேண்டும். இதேவேளை, சிவனொளிபாதமலை தலம் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.