Sunday, April 28, 2024
Home » அரபு மொழியை மேம்படுத்துவதிலும் பரவலாக்குவதிலும் அளப்பரிய பங்களிப்புக்களை நல்கும் சவூதி அரேபியா

அரபு மொழியை மேம்படுத்துவதிலும் பரவலாக்குவதிலும் அளப்பரிய பங்களிப்புக்களை நல்கும் சவூதி அரேபியா

- இலங்கை கல்வித்திட்டத்தில் அங்கீகரிப்பட்ட மொழி அரபு

by Rizwan Segu Mohideen
December 18, 2023 5:46 pm 0 comment

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அரபு மொழி தினத்தின் 50வது ஆண்டு தினம் இன்று 18 ஆம் (டிசம்பர்) திகதியாகும். இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் சவூதி அரேபியா அதனை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறது. அந்த வகையில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியின் ஏற்பாட்டில் விஷேட வைபவமொன்று கொழும்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சவூதி மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் விஷேட ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியின் ஏற்பாட்டில் இவ்வைபவம் இன்று கொழும்பில் நடாத்தப்படுகின்றன. இந்நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் சர்வதேச அரபு மொழி தின வைபவமொன்று இங்கு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இப்பெருமை சவூதி அரேபியாவையே சாரும்.

அதேநேரம், குர்ஆன் மனனப் போட்டிகளை வருடாவருடம் உலகளாவிய மட்டத்திலும் பிராந்திய மற்றும் நட்பு நாடுகள் மட்டத்திலும் நடாத்தி பெறுமதி மிக்க பரிசில்களை சவூதி வழங்கி வருகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் தேசிய மட்ட குர்ஆன் மனனப் போட்டியொன்று கடந்த ஜுலை மாதத்தில் தூதுவர் காலித் ஹமூத் கஹ்தானியின் ஏற்பாட்டில் முதற்தடவையாக நடாத்தப்பட்டமை தெரிந்ததே.

சவூதி அரேபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில் இன்று இந்த சர்வதேச அரபு மொழி தினத்தின் விஷேட வைபவம் சவூதியின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகிறது. கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த சர்வதேச அரபு மொழி தின வைபவத்தில் அமைச்சர்கள், முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளின் இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இவ்வைபவத்தையொட்டி அரபு மொழியின் முக்கியத்துவத்தை இலங்கை மக்களுக்கு எடுத்தியம்பும் வகையில் தூதுவரின் விஷேட உரை இடம்பெற உள்ளதோடு அரபு எழுத்தணிக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவை தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய போது, அரபு எழுத்தணியை இந்நாட்டு பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பாடமாக அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழி அரபாகும். அல்லாஹ் பேசுகின்ற மொழியும் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பேசுகின்ற மொழியும் பல நபிமார்களும் பேசிய மொழியும் அரபு மொழி தான். அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழியும் இறைத்தூதர் புனித மக்கா மதீனா இரண்டிலும் புனித தீனுல் இஸ்லாத்தைப் போதித்த மொழியும் அரபி மொழி என்பதால் இப்புனித அல்குர்ஆன் மற்றும் நபிமொழிக் கிரந்தங்கள் அனைத்தும் அரபு மொழியில் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டு இன்று வரையும் இன்ஷா அல்லாஹ் மறுமை நாள் வரையும் பாதுகாக்கப்படும்.

மறுமையில் அல்லாஹ் தன் அடியார்களுடன் அவனது உயர்ந்த தகுதிக்கேற்ப தான் விரும்பிய மொழியில் பேசுபவனாக இருந்தாலும் அரபு மொழியில் தன் அடியார்களுடன் பேசுவான் என்ற கருத்துக்களும் இருக்கிறது. ஐவேளை தொழுகைக்காக சொல்லப்படும் அதான் (பாங்கு) உட்பட முஸ்லிம்கள் தினமும் தொழுகின்ற ஐவேளைத் தொழுகையும் இன்னும் பல வணக்க வழிபாடுகளும் அரபியில் தான் அமைய வேண்டும். அப்போது தான் அவர்களது வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும்.

அந்த வகையில் அரபு மொழி என்பது இம்மையிலும் மறுமையிலும் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கும் மொழியாக உள்ளது.

புனித மக்கா, மதீனா உட்பட சவூதி அரேபியாவிலும் ஏனைய நாடுகளிலும் குறிப்பாக பல அரபு நாடுகளிலும் இம்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலகின் பல நாடுகளிலும் அரபு மொழியைக் கற்றுக்கொடுக்கவென கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் நடாத்திவரும் சவூதி அரேபியா, அரபு மொழி கற்கை நிலையங்களையும் அமைத்துள்ளது. குறிப்பாக அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச அகடமி சவூதி அரேபியாவில் ஸ்தாபித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவூதி அரேபிய அமைச்சரவையின் ஏகோபித்த முடிவின்படி, பிராந்திய மற்றும் உலகளவில் அரபு மொழியின் பங்கை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அகடமி ரியாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.

அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச அகடமி, சவூதி அரேபியாவில் செயல்படுத்தப்படும் சிறந்த கலாசார முயற்சிகளுக்குள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கலாசாரம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதன் தாக்கத்தைச் செலுத்துவதற்காக மன்னரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். உலகளவில் அரபு மொழிக்கான பங்களிப்பை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

இதேவேளை இலங்கை உட்பட உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்ளவென சவுதி வருடா வருடம் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. அவ்வாறு புலமைப்பரிசில் பெற்று சவூதி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் கற்கைக்கு மேலதிகமாக அரபு மொழியைச் சரளமாக பேசவும் எழுதவும் வசதியளிக்கும் வகையில் முற்றிலும் இலவசமாக இரண்டு வருட காலம் அரபு மொழி கற்பிக்கப்படுவதோடு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் நிமித்தம் சவூதி அரேபியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரபு மொழி பீடம் விஷேடமாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு அங்குள்ள இஸ்லாமிய கலாசார மற்றும் வழிகாட்டல்கள் நிலையங்களில் அரபு மொழி கற்பிக்கப்படுவதோடு இஸ்லாமிய வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. அல் குர்ஆன் அரபு மொழியில் இருப்பதால் இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம் சிறுவர்களும் சிறுவயதிலிருந்தே அரபு மொழியில் அல் குர்ஆனை நன்கு சரளமாக ஓதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதன் ஊடாக அல்குர்ஆனை உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சரளமாக ஓதக்கூடியவர்களாக உள்ளனர். இது மாபெரும் அருளாகும்.

அத்தோடு இலங்கையிலுள்ள அரபிக் கல்லூரிகளிலும் அரபு மொழி கற்பிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் பாடசாலைக் கல்வித்திட்டத்தின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புக்களுக்கும் பல்கலைக்கழக கற்கைக்கும் அரபு மொழியை ஒரு முக்கிய பாடமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் அரபு மொழி நான்காவது இடத்தில் உள்ளது, அரேபிய நாடுகள் உட்பட சுமார் 66 நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. அதனால் 1973இல் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக அரபு விளங்குகிறது. இவ்வாறான பின்புலத்தில் அரபு மொழியைக் பாதுகாப்பதற்கு சவுதி அரேபியா அதி முக்கியத்துவம் அளித்திருக்கிறது. அதன் அரசியலமைப்பின் முதல் ஷரத்தாக அதனை உள்ளடக்கியுள்ளதோடு அரபை உத்தியோகபூர்வ மொழியாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஒரு தடவை, ‘எமது நாடு சவூதி அரேபியா. அது ஒரு உண்மையான அரபு நாடு. அரபு மொழியை அதன் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. இதற்காக பல கல்லூரிகள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் சவூதி அரேபியாவுக்குள்ளேயும் வெளியேயும் நிறுவப்பட்டுள்ளன. அரபு மொழியைக் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை சவூதி அரேபியா என்றும் ஆதரித்து ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அரபு நாடுகள் அடங்கலாக ஏனைய நாடுகளிலும் அரபு மொழியின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில் மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ், அரபு மொழி சேவைக்கான சர்வதேச மையமொன்றையும் ஸ்தாபித்துள்ளார்.

அல் குர்ஆனின் மூல மொழி அரபாகும்

அஷ்ஷைக் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT