லிபியாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடியேறிகள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அந்தத் தகவலை குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பிள்ளைகளும் பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் வெளியான அறிக்கையைப் பற்றி லிபியாவின் அரசாங்கம் கருத்துரைக்கவில்லை. ஸுவாரா நகரிலிருந்து புறப்பட்ட கப்பலில் 86 பேர் பயணம் செய்ததாக விபத்தில் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
மத்தியதரைக் கடலின் மையப் பகுதி, உலகத்திலேயே மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்று எனக் குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டது.
ஆபிரிக்காவிலிருந்து பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் பஞ்சம், கலவரங்கள் போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க அந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில், லிபியா கரையோரத்தில் ஏற்பட்ட ஒரு கப்பல் விபத்தில் குறைந்தது 73 குடியேறிகள் பலியாயினர்.