தலா 5 இலட்சம் ரூபா வழங்க நீதிமன்றம் உத்தரவு
மிரிஹான பொலிஸ் குழு ஒன்றின் மூலம் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை சட்டத்துக்கு முரணான வகையில் கைது செய்து, மனிதாபிமானமற்றரீதியில் சித்திரவதைக்கு உட்படுத்தி அவரது அடிப்படை உரிமையை மீறிய குற்றத்திற்காக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அப்போதைய மிரிஹான பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட குறித்த இராணுவ வீரருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாவீதம் வழங்குமாறே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் அதற்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈட்டை மனுதாரரான இராணுவ வீரருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அந்த வழக்கு தீர்ப்பின் பிரதியை சட்டமா அதிபர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மில்லவ ரஞ்சித் சுமங்கலவினால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்கில், பிரதிவாதிகளாக மிரிஹான பொலிஸ் உத்தியோகத்தரான பண்டார, அவசர பிரிவின் பொறுப்பதிகாரி பாத்திய ஜயசிங்க, பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் வனசுந்தர அப்போது அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)