திருவருகை காலத்தில் பயணிக்கின்றோம்.இயேசு பிறந்த பெத்லகேமில் யுத்தம் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டு திருவருகைக்கால செயற்பாடுகள் அமைதி மற்றும் செபத்தை உள்ளடக்கியதாக அமைகின்றது என்றும், காசா, இஸ்ரேல் மட்டுமின்றி மேற்குக் கரையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்றும் அருட்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன்.
டிசம்பர் 2 சனிக்கிழமை திருவருகைக் காலத்தின் முன்தயாரிப்பிற்கான நாளை முன்னிட்டு புனித பூமியில் நடைபெற்ற திருவருகைக்காலத் தயாரிப்புக்கள் குறித்து புனித பூமியின் காவலரான பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் தகவல்களை வெளியிட்டார்.
இயேசு பிறந்த பெத்லகேமில் திருப்பயணிகள் எவரும் இல்லை, மனிதர்கள் யாருமின்றி புனித தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டிய அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், காசா மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இடம்பெற்று வரும் யுத்தம் மற்றும் வன்முறைகளே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பெத்லகேம் மூடப்பட்ட ஒரு நகரமாக, எருசலேமிலிருந்து பிரிக்கப்பட்ட நகரமாகக் காட்சியளிக்கின்றது என்றும், வரலாற்றில் இதுவரை நடந்திராத இச்செயல் பெத்லகேம் யுத்தம் மற்றும் மோதல்களின் விளைவுகளை அனுபவித்து வருகிறது என்பதை முழு உலகிற்கும் நினைவூட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் பேட்டன்.
டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை பெத்லகேம் திருத்தலத்தில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஆர்மேனிய தலைவர்களால் வரவேற்கப்பட்டு அவர்களோடு இணைந்து அருள்பணியாளர் பேட்டன் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி மதியம் எருசலேம் திரும்பினார்.
பெத்லகேமுக்குள் நுழைவது என்பது இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த அனுபவத்தை நினைவூட்டுகின்றது என்றும், மக்களுக்கு விடுதலையின் ஒளியைக் கொடுக்கும் அறிகுறிகளின் வரிசையில் ஒரு சுவரைக் கடந்து செல்வது என்பது தற்போதைய யுத்த சூழ்நிலையில் நம்பிக்கையின் வலுவான அடையாளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெரினா ராஜ்