நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று (04) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நேற்றுமுன்தினம் (03) மாலை இராகலை பிரதேசத்தில் மூன்று இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியமையால், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரும் தமது கடமைகளிலிருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் உதயசிறி பண்டார, தனியார் பஸ் ஊழியர்கள் குழுவினரால் தனது ஊழியர்கள் மூவர் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே மாலையில் பஸ்களை இயக்க முடியுமென நம்புவதாகவும் பண்டார தெரிவித்தார். இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையினர் வேலை நிறுத்தம் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகள் போக்குவரத்து வசதிகளை பெற முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பில் இராகலை மற்றும் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்