ஜா-எல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய, கால்வாயில் குதித்த நிலையில் காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் நீர்கொழும்பு களப்புக்கு அருகில், பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை உடைத்தல், போதைப் பொருள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் செல்லும் கால்வாய்க்குள் குதித்த நிலையில் குறித்த சந்தேகநபரைக் கைது செய்ய குதித்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமைக்கு இணைந்த, சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளான கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.