உடப்புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோடன் தோட்ட பௌத்த விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது மண்மேட்டிலிருந்து பாரிய கற்கள் குடியிருப்பின் ஒரு பகுதி சுவர் மீது சரிந்து வீழ்ந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குடியிருப்பு தளபாடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குடியிருப்பில் தங்கியிருந்த பௌத்த பிக்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அத்துடன் அனர்த்தத்துக்குள்ளான குடியிருப்புக்குள் உட்புகுந்த பாரிய கற்களை அகற்றும் நடவடிக்கையில் கிராமவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் பாரிய கற்பாறைகள், மண்மேடுகள்,மரங்கள் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்சரிவுகள்,பாறை சரிவுகள் மற்றும் நில வெடிப்புக்கள் காணப்படும் இடங்கள் தொடர்பில் உடனடியாக மாவட்ட செயலகம்,பிரதேச செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(ஆ.ரமேஷ்)