ஹப்புத்தளை பிரதேசத்தில் 3 வீடுகள் தாழிறங்கும் அபாயத்தில் இருப்பதாக ஊவா மாகாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (22.11.2023) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹப்புத்தளை பகுதியிலுள்ள 3 வீடுகள் தாழிறங்கும் அபாயத்தில் இருக்கின்றன. இவ்வீடுகளில் வசித்த 3 குடும்பங்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஹப்புத்தளையில் பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள 3 வீடுகள் தாழிறங்கும் அபாயத்திலுள்ளன.
தற்போது வீடுகள் அமைந்துள்ள இடத்தில் பெரிய நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் அபாயகரமான நிலையை கண்டு வீட்டு உரிமையாளர்களை வெளியேறும்படி கூறினர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இவ்வீடுகளிலிருந்த மூன்று குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்பொழுது நிலவிவருகின்ற மோசமான காலநிலை காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
(நுவரெலியா தினகரன் நிருபர்)