நீண்டகால இலக்குகளுடனான வேலைத்திட்டமே தீர்வு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லையென்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கையை பொதுநல நாடாக கொண்டு செல்ல வேண்டுமெனில் வரி செலுத்தாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
நாட்டின் பணவீக்கத்தை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. 70 % ஆக இருந்த பணவீக்கம் -2.5 % வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்பேது, இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதன் உடாக நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது புரிகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, பொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறையாவிட்டாலும், விலை அதிகரிப்பு வேகத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். எம்மால் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.
அதன் பலன்களை மக்களே எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள, புதிய முதலீடுகள் அவசியம். தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். தொழில் சந்தைக்கு ஆக்கத்திறன் மிக்க இளம் சமூகம் உள்வாங்கப்பட வேண்டும்.இம்முறை வரவு செலவுத் திட்டம் மேற்படித் திட்டங்கள் உள்ளடங்க லாக எதிர்கால இலக்குகளை கருத்திற்கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இந்நாட்டை புதிய பொருளாதார கட்டமைப்புக்குள் இட்டுச் செல்லுமென்றும் அவர் தெரிவி்தார்.