இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் சுப்பர் ஸ்மாஷ் தொடரில் நோதன் பிரேவ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 6 அணிகள் கொண்ட இந்தத் தொடரில் இதுவரை கிண்ணம் வெல்லாத அணியாக நோதன் பிரேவ் அணி இருந்து வருகிறது.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் தொடரில் ஆடி வரும் சமரி அத்தபத்து அந்தத் தொடரில் இரண்டாவது அதிக ஓட்டங்கள் பெற்றவராக இடம்பிடித்திருப்பதோடு பந்துவீச்சிலும் சோபித்து வருகிறார். சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடும் அவர் பத்து இன்னிங்ஸ்களில் 451 ஓட்டங்களை பெற்றதோடு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிட்னி தண்டர் அணி புள்ளிப் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்படும் 17 ஆவது மகளிர் சுப்பர் ஸ்மாஷ் தொடர் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.