யாழ்.- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில், மூன்று பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், விசாரணைகள் முன்னெடுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைதான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 24) எனும் இளைஞன் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்களென தெரியவந்தது. இதனடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். விசேட நிருபர்