விவசாயிகளுக்கு உரத்தை கொள்வனவு செய்வதற்காக ஒரு ஹெக்டெயாருக்கு இருபதாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்துள்ளோம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொடிதோடை செய்கையை ஊக்குவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட 70 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த பெரும்போகத்தில் நாம் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம். மூன்று போகங்களுக்கு பிறகு விவசாயிகளுக்கு தேவையான சகல வகை உரங்களினையும் வழங்கியிருந்தோம். இருந்தாலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பாரியதொரு வரட்சிக்குமுகம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் செய்கை பண்ணப்பட்டிருந்த 65,000 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்படைந்தன. இந்த வயல் நிலங்கள் அனைத்தும் சிறந்த அறுவடையினை பெறுவதற்குத் தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறு பாதிப்படைந்தது.
இதனைத் தொடர்ந்து பெய்த அடைமழையின் காரணமாகவும் அறுவடைக்குத் தயாராக இருந்த வரட்சியினால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட 11,000 ஏக்கர் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கி அழிவிற்கு உள்ளாகின. இருந்தாலும் தற்பொழுதுள்ள இந்த மழைக்காலநிலை தொடர்ந்தும் நீடிக்காது.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்தின் பிறகு சர்வதேச காலநிலை தரவுகளுக்கு ஏற்ப கடந்தபெரும் போகத்தைவிடவும் எதிர்வரும் பெரும் போகத்தில் பாரியதொரு வரட்சிநிலை ஏற்பட வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்தில் எந்தவொரு பயிரையும் பயிரிட முடியாதளவிற்கு நீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் தற்பொழுதுள்ள நீரை பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
இதனால் உரியகாலத்தில் விவசாய செய்கையினை ஆரம்பிக்க வேண்டும். விவசாயசெய்கை ஆரம்பிக்கப்படாத பிரதேசங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன. இதன் பிரதிபலனாக வயல்கள் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளது. இதற்குப் பிறகு உரியகாலத்தில் விவசாய செய்கையில் ஈடுபடாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்படமாட்டாதெனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்