உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அதிகாலையில் நாடு திரும்பியதோடு இதனையொட்டி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பெங்களூர், சின்னசுவாமி மைதானத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தனது கடைசி ரவுண்ட் ரொபின் சுற்றுப் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணியினர் அதனைத் தொடர்ந்து நேரடியாக இலங்கை திரும்பியுள்ளனர்.
பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் யூ.எல்.-174 இல் நேற்று அதிகாலை 5.05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த இலங்கை வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் விமானநிலையத்தில் வந்திருந்தனர். விமானநிலையத்தில் இருந்து இலங்கை வீரர்கள் பயணிப்பதற்காக பாதுகாப்புடனான பஸ் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் பெரும்பாலான வீரர்கள் தமது தனிப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஆடிய 9 போட்டிகளில் இரண்டில் மாத்திரமே வென்றதோடு எஞ்சிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.