Thursday, May 2, 2024
Home » மின்னஞ்சல், வட்ஸ் அப், குறுஞ்செய்தி ஊடாக மருத்துவ ஆய்வுப் பரிசோதனை அறிக்ைககள்

மின்னஞ்சல், வட்ஸ் அப், குறுஞ்செய்தி ஊடாக மருத்துவ ஆய்வுப் பரிசோதனை அறிக்ைககள்

பாலமுனையில் பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம்

by damith
November 6, 2023 11:31 am 0 comment

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையானது இப்பிரதேச மக்களின் நலன் கருதி பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றை பாலமுனை பிரதேச வைத்தியசாலைக் கட்டடத்தில் திறந்து வைத்துள்ளது.

மிகவும் குறைந்தளவிலான நிதியைக் கொண்டும், பிராந்திய சுகாதார நிறுவனங்களில் உள்ள வளங்களைக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிராந்திய ஆய்வுகூடத்தில் வைத்தியசாலைகளில் சேகரிக்கப்படுகின்ற நோயாளர்களின் குருதி மற்றும் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளதுடன், விசேட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் முடிவு அறிக்கைகள் உரிய நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு Online (email, whatsapp) மற்றும் குறுஞ்செய்தி ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த ஆய்வுகூடத்தின் ஊடாக கல்முனை பிரதேச மக்கள் பெரிதும் நன்மை அடையவுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவினங்களைக் குறைத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அதனை செயற்படுத்துவதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இலங்கையில் இவ்வாறான முதலாவது பிராந்திய ஆய்வுகூடத்தை கல்முனை பிரதேசத்திலே திறந்துள்ளதன் ஊடாக தேசிய ரீதியில் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற திறப்புவிழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மெலிண்டன் கொஸ்டா கௌரவ அதிதியாகவும், முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தைத் திறந்து வைத்தனர்.

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், பாலமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் மற்றும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், மருத்துவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆதம்லெப்பை றியாஸ் (பாலமுனை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT