சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாத்தளை வெள்ளக்கல் அருள்மிகு அழகர் பெருமான் திருக்கோவில் புனராவர்த்தன அஸ்தபந்தன பஞ்சகுண்டபக்ஷ திருக்குடமுழுக்கு பெருசாந்தி விழா எதிர்வரும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும்.
அழகர் பெருமாள் திருக்கோவில் தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் உள்ள அழகர்மலையில் திருமலிலுஞ்சோலையில் உள்ளது. இவ்வகையில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோவில் மத்திய மாகாணத்தில் கண்டி_-யாழ்ப்பாணம் (A9) நெடுஞ்சாலையில் உள்ள வரலாற்று நகரமான மாத்தளையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது இலங்கையில் உள்ள ஒரே அழகர் கோயிலாகும்.
பூர்வாங்க கும்பாபிஷேக கிரியைகள் நாளை 25ம் திகதி ஆரம்பமாகும். நாளை காலை 8 இற்கு விஸ்பம் சேன கணபதிபூஜை, தனபூஜை ,கணபதி மகாலட்சுமி ஹோமம், கங்கா தீர்த்த சங்கீரனம் ஆகிய புனித கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேச பலி, பூஜை, துளசி, கோவாசம், யாகசாலை பிரவேசம் நடைபெறும்.
26/10/2023 வியாழக்கிழமை எண்ணெய்க் காப்பு நடைபெறும். அன்று காலை 8 மணிக்கு மகாகணபதி வழிபாடு, யாகசாலை பிரவேஷம், யாகபூஜை சுதர்சன சக்கர ஹோமம், திருவாய்மொழி பாராயணம் நடைபெற்று மாலை 5 மணிக்கு, கர்ப்பதுவார பூஜை, நாராயண ஹோமம், பிரதட்சணம், சதுர் வேதாரணியம், திருமொழி பாராயணம், குருமார் வஸ்திர ஊத்தரியம் வழங்கல் நடைபெறும்.
27/10/2023 கும்பாபிஷேக பெருவிழா நடைபெறும். அன்று காலை 5:00 மணிக்கு கணபதி பூஜை, உபசார ஹோமம், விசேட தீபாராதனை, பிரதிஷ்டனம், திருவாய்மொழி பாராயணம் ,கீத வாத்தியம், சர்வாஞ்சலி, கும்ப உற்சவம் நடைபெற்று மேற்குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேதஸ்ரீ அழகர் பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.
ஆலய பிரதமகுரு தமிழ்நாடு கும்பகோணம் பெரியார்மடம் சீர்வளர்சீர் சிவ பொன்முடி முருகானந்த தேசிக சுவாமிகள் தலைமையில் மற்றும் கிரியா ஜோதி பிரம்மஸ்ரீ முத்து பாலச்சந்திர குருக்கள், ஆகம கிரியாரத்தினம் பிரம்மஸ்ரீ குமார நந்தகுமார குருக்கள், சிவஸ்ரீ திலகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ கணேச திருநீலகண்ட குருக்கள், சிவஸ்ரீ சாமி மகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ க. கார்த்திகேய குருக்கள், சிவஸ்ரீ வே. விபுலானந்த குருக்கள், சிவஸ்ரீ தோ மிதுஹா சர்மா, சிவஸ்ரீ ச பிரபுசர்மா, சிவஸ்ரீ பி சுதர்சனசர்மா, சிவஸ்ரீ கமலதாச சர்மா, சிவஸ்ரீ நிசாந்தன் சர்மா ஆகியோர் இணைந்து புசல்லாவ புவநேந்திர குழுவினர் மங்கல இசை வழங்க கிரிகைகளை நடத்துகின்றனர்.
ஆலயத்தினை ஆகம முறைப்படி எல்கடுவ பாலேந்திரன் குழுவினர் மற்றும் உக்குவளை நவரெட்னராஜா குழுவினர் இணைந்து புனருத்தாரணம் செய்துள்ளனர்.
வெள்ளக்கல் ஆலய கும்பாபிஷேக கிரியைகளில் அடியார்கள் கலந்துகொண்டு நாராயண பெருமாளின் திருவருள் கடாட்சத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஆலய தர்மகர்த்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கோயில் நூற்றாண்டு பைழமையானது என்பதால், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் 12.02.2004 அன்று நடைபெற்று 27.01.2010 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிலின் நிர்வாகம் தொடக்கத்தில் தாபகர் கொங்கையா சேர்வையால் செய்யப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு 1925 பின் கோவில் நில உரிமையாளரான குடியார் மாரிமுத்து பொன்னையா முருகையா தேவர் வழித்தோன்றல்களால் நிர்வாகம் தொடர்கிறது.
--எச்.எச்.விக்ரமசிங்க