ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல் அன்ஸார் பள்ளிவாசல் மீது நேற்று (22) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கட்டடத்தை கட்டளை மையமாகப் பயன்படுத்தி வந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜெனின் அகதி முகாமில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிவாசல் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதும் மருத்துவ குழுக்கள் அங்கு விரைவதும் சமூக ஊடகத்தில் வெளியான படங்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்குக் கரையில் அதிக பலம் கொண்டதும் பிரபலமானதுமான ஜெனின் படையணியுடன் கூட்டிணைவதற்கு எதிராக சில குடியிருப்பாளர்களுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை நடத்துகின்றபோதும் மேற்குக் கரையில் அவ்வாறான தாக்குதல்களை நடத்துவது மிக அரிதாகும்.
கடந்த ஒக்டொபர் 7ஆம் திகதி காசாவில் மோதல் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.