சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
சுந்தரரின் பணிகள்
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பிவந்து சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார் என்று சுந்தரமூர்த்தி நாயனாரது தெய்வீகத்திறனை சேக்கிழார், பெரிய புராணத்தில் போற்றுவார்.கி.பி 694- கி.பி 712 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்து தனது 18வது வயதில் இறையடியெய்தியவராக இவர் காணப்படுகின்றார்.
சைவ சமயப் பணிகள்
சிவனடியார் வழிபாடு
ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் எவ்வண்ணம் இறைவனுக்கும் இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தனரோ அது போன்று சுந்தரரும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு அவர்களை விட ஒருபடி அப்பால் சென்று இறையடியார்களது வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கியவராகக் காணப்படுகின்றார். திருவாரூர் தியாகேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்ற சுந்தரர், அங்கு கூடியிருந்த சிவனடியார்களை மதிக்காது சென்ற போது அவ்வடியார்களுள் விறன்மிண்ட நாயனார் சுந்தரரது செயல் கண்டு விசனம் கொள்ள சுந்தரர் தம் தவறை உணர்ந்து சிவனை வேண்டினார். சிவன் அந்தணர் வடிவில் வந்து, தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்…., என அடியெடுத்துக் கொடுக்க அவர் சிவனடியார்களைப் போற்றும் முகமாக “திருத்தொண்டர் தொகை”யைப் பாடினார்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.