காசா மீதான இஸ்ரேலிய போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களை எகிப்தை ஏற்கும்படி கோருவதற்கு பதில் அவர்களை நெகேவ் பாலைவனத்திற்கு அனுப்பலாம் என்று எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலில் நெகேவ் பாலைவனம் உள்ளது. காசாவில் தாம் விரும்பும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை பலஸ்தீனர்களை நெகேவ் பாலைவனத்திற்கு அனுப்ப முடியும். பின்னர் அவர்களால் காசாவுக்கு திரும்ப முடியும்” என்று ஜெர்மனி தலைவர் ஒலேப் ஸ்கோல்ஸ் உடன் கெய்ரோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து சிசி தெரிவித்தார்.
இதன்போது எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் பலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு சிசி எதிர்ப்பை வெளியிட்டார்.
“பலஸ்தீனகர்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டால், இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்பட்டால் எகிப்து அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்பதோடு சினாய் இஸ்ரேலுக்கு எதிரான தளமாக மாறிவிடும். அப்போது எகிப்து பயங்கரவாதத்திற்கான தளமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடும்” என்றார் சிசி.
காசா மீதான முழு முற்றுகை பலஸ்தீனர்களை சினாய்க்கு அனுப்பும் திட்டம் என்றும் அவர் சாடினார்.
ஏற்கனவே பெரும்பான்மையான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.