கடந்த 23.09.2023 அன்று இயற்கை எய்திய இலங்கையின் புகழ்பூத்த மூத்த எழுத்தாளர் அமரர்.ஆ.மு.சி.வேலழகன் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக அன்னாருக்கான அஞ்சலி மற்றும் நினைவுப் பகிர்வு நிகழ்வு பேத்தாழை பொதுநூலகம் மற்றும் விபுலானந்தர் வாசகர் வட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைகழகத்தின் முன்னைநாள் பேராசிரியர் சி.மௌனகுரு, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு தமிழ்ச் சங்க உறுப்பினர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினர்.
விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினரும் கவிஞருமான தமிழ்க்கீரன் த.கி.ஷர்மிதனின் கவிதாஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அமரர் வேலழகன் வாழ்க்கை அறிமுகத்தினை வாசகர் வட்ட ஆலோசகரும் ஆசிரியரும் எழுத்தாளருமான திருமதி ஸோபா ஜெயரஞ்சித் நிகழ்த்தியிருந்தார்.
அதனைத் தொடரந்து வேலழகன் அவர்களின் நினைவுகள் நினைவுரைஞர்களால் பகிரப்பட்டன. அன்னாரின் பன்முக ஆளுமை, தமிழ்ப்பற்று, பண்பொழுக்கம், சேவை முதலானவை பற்றிய அனுபவங்கள் பகிரப்பட்டன.
அன்னாரது ஆக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் உபகாரம் என்று அங்கு உரையாற்றிய பலரும் எடுத்துக் கூறியிருந்தனர்.
த. சர்மிதன்…?
விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்