ஹற்றன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் கூடியதாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக நேற்று (16) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், ஹற்றன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், அதிகாரிகள், ஹற்றன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மற்றும் சாரதி சங்கங்களின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த பஸ் தரிப்பிடத்தை நவீனமயப்படுத்துவது குறித்து அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்
இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதற்கமைய ஹற்றன் டிக்கோயா நகர சபை இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது. குண்டும், குழியுமாக இருந்த ஹற்றன் பஸ் தரிப்பிடத்தால், மழை காலங்களில் பயணிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் பஸ் தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு மக்கள், சாரதிகள், நடத்துநர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)