கொழும்பு ஸாஹிரா கல்லூரி இஸ்லாமிய சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மீலாதுந் நபி பரிசளிப்பு வைபவம் சனிக்கிழமை (14) கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் இஸ்லாமிய சங்க தலைவர் மொஹம்மட் சிஹாபின் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் கல்விப் பணிப்பாளர் மேஜர் என். ரி. நஸூமுத்தீன் கலந்துகொண்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவித்து அவர்களின் சாதனைகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் ஸாஹிரா கல்லூரி நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளின் தந்தை போன்று எனத் தெரிவித்தார். நமது சிறந்த தலைவர்களான ஒராபி பாஷா, சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் மற்றும் அப்துல் கபூர் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தின் கல்வியை உயர்த்தினர். மேலும் முஹம்மது நபியின் பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரியவர் டாக்டர் டி.பி. ஜாயா என அவர் நினைவூட்டனார்.
சிறப்புப் பேச்சாளராக கொழும்பு மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவரும் ஸாஹிரா கல்லூரி ஆசிரியருமான அஷ்ஷெய்க் எஸ்.ஏ.அப்துல் ஹலீம் கலந்து கொண்டதுடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் பிரதிநிதியாக திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.ஜாவித், ஸாஹிரா கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பெளசுல் ஹமீட், செயலாளர் அலவி முக்தார், கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் மொஹம்மத் ஷிராஸ், ஆளுநர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 60 பாடசாலைகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டிகளில் கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி கூடுதல் புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ருஸைக் பாரூக்