புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணக்களத்துடன் சேர்ந்து நடத்தும் இவ்வருட தேசிய மீலாத் விழா, எதிர்வரும் 22 இல், மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தியல் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய மன்னார் மாவட்டத்தில் தேசிய மீழாத் விழாவை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஒரு வருடத்தினுள் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பல அமைச்சுக்கள் இவ்வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவுள்ளதாக தேசிய மீழாத் 2023 ஆம் ஆண்டுக்கான இணைப்பாளரும் , கிராமிய பொருளாதாரா இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இதன் முதற் கட்டமாக இவ்வருடத்தில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய துரித அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார தேவைகளுக்கென ரூபா 187.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன.
வாழ்வாதார அபிவிருத்தியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு தலா 03 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.மற்றும் பயிர் செய்கைக்கான உழுந்து, பயறு ஆகியவைகளை வழங்குவதற்கு 21 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சு இந்நிதி ஒதுக்கப்பட்டு,பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலுமுள்ள விவசாயிகளுக்கு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவற்றை வழங்கினார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலர் பிரிவில் நகர அபிவிருத்திக்காக ரூபா 130 மில்லியன் ரூபா இந்த வருடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்காக நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு மூலம் மேலும் 200 மிலியன்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் சிலாவத்துறை முச்சந்தி விரிவாக்கப்பட்டு நகரமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்
புத்தளம் – மரிச்சுக்கட்டி பாதையை மீண்டும் திறப்பதற்கும் அப்பாதைக்கு மாற்று வழியாக கடலோரமாக புத்தளம், எழுவன்குளம்- மரிச்சுகட்டி வரை புதிய பாதை ஒன்றை அமைப்பதன் சாத்தியங்கள் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பற்றி மன்னாரில் இம்மாதம் 22 இல், திகதி நடைபெறும் தேசிய மீழாத் விழாவை அடுத்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்..