மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர் ஒருவரின் கண்களில் மிளகாய்த் தூளை தூவி, 45 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இரவு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதிகாலையில், முச்சக்கரவண்டியில் மற்றொரு ஊழியருடன் மேற்படி வர்த்தகர் பயணித்தபோதே, மீகொடை தகம் மாவத்தைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி, தகம் மாவத்தைப் பிரதேசத்திலுள்ள அவ்வூழியரின் வீட்டுக்குச் சென்று, அவரை அங்கு இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரும் நோக்கிலேயே குறித்த வர்த்தகர் சென்றுள்ளார். அந்த ஊழியரின் வீட்டிற்கருவில் முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டு ஊழியர் அங்கிருந்து சென்றபின்னர், முச்சக்கர வண்டிக்குள்ளிருந்த வர்த்தகரின் கண்களில் திடீரென மிளகாய்த் தூளை தூவிய நபரொருவர் ,பார்சலாக கட்டப்பட்டிருந்த மேற்படி 45 இலட்சம் ரூபா பணத்தை களவாடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)