காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலடி ஆற்றுக்கு டிக்டாக் எடுக்க சென்ற இளைஞர்களின் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (08) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமிர்தகழி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுகளுடைய பிரபாகரன் பிரிஜனன் மற்றும் பெரிய உப்போடை பிரதேசத்தைச் சேர்ந்த தவசீலன் கிரிஷாந்த் ஆகியோரே இவ்வாறு இவ்விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.
சம்பவ தினத்தன்று ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று நாவலடி ஆற்றுப்பகுதிக்கு படகு ஒன்றில் தங்களின் பொழுதுபோக்கினை கழிப்பதற்காக ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று அங்கு டிக்டாக் எடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென வள்ளம் கவிழ்ந்தது. அவ்வேளை குறித்த படகிலிருந்த நால்வர் நீந்தி கரை சேர்ந்ததாகவும் மற்றைய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்டூர் தினகரன் நிருபர்