காத்தான்குடியில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத்விழா அண்மையில் நடைபெற்றது.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழாவின் முதல் நிகழ்வாக சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத்விழா ஊர்வலம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை வரை சென்று மீண்டும் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த மீலாத் விழாவில் இன ஐக்கிய மீலாத் விழாவையொட்டி பாடசாலை மாணணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் மற்றும் உலமாக்கள் சிலர் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சமயத் தலைவர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் சிறப்புரையை இலங்கை ஸரீஆ கவுன்சில் உபசெயலாளரும் வத்தளை மஹ்மூதிய்யா அரபுக்கல்லூரியின் அதிபருமான மௌலவி சி.எம்.அஸ்மீர் ஹசனி நிகழ்த்தினார். இதன் போது மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)