மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத் தாலிக்கொடியை திருடிய 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25) இரவு காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊர் வீதியை அண்டி அமைந்துள்ள ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரின் வீட்டில் எவரும் இல்லாத வேளையில் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 12ஆம் திகதி வீட்டின் முன் கதவுப் பக்கமாக உடைத்துக்கொண்டு நுழைந்த இச்சந்தேகநபர் திருட்டை புரிந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மட்டக்களப்பிலுள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு வீட்டு உரிமையாளர் தனது வீட்டுக்கு திரும்பிய போது, தாலிக்கொடி திருட்டுப் போனமை தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி இச்சந்தேநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்