Monday, April 29, 2024
Home » மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி

மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி

மேலும் சில நாடுகளுக்கு ஏற்றவும் பேச்சு

by damith
September 25, 2023 7:09 am 0 comment

மாதாந்தம் இலங்கையிலிருந்து 1.5 மில்லியன் முட்டைகள் மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அடுத்தவருடம் முதல் மேலும் நான்கு நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதிசெய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருவதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் முட்டைக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்திசெய்யும் வகையில் தேவையான அளவு தாய்க் கோழிகளையும், சூல் முட்டைகளையும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், எதிர்வரும் ஜனவரி முதல் முட்டை உற்பத்தி அதிகரித்து முட்டை விலைகள் மேலும் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி கண்ணொருவ விலங்கு உற்பத்திப்பண்ணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீட்டிற்கு இணங்க இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் முட்டை உற்பத்தியில் தன்னிறைவு காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக சிங்கப்பூர், மலேசியா, கொரியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான கேள்வி அதிகரித்த நிலையில் டிசம்பர் மாதம் வரை முட்டை இறக்குமதியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின்னர் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது.

நாட்டில் முட்டைக்கான பற்றாக்குறை காணப்படும் போதும் 1.5 மில்லியன் முட்டைகள் மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முட்டைக்கான கேள்வி வேறு நாடுகளுக்கு செல்வதை பாதுகாக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த விலை மேலும் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT