பேருவளை, சீனன்கோட்டை அல்ஹுமைஸறா தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பல நோக்கு திட்டங்கள் கொண்ட மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (25) பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் இப்றாஹீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌஸி பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். இந்நிகழ்வில் துபாயில் இயங்கும் கல்வி அபிவிருத்திக்கான வளங்கள் நிறுவனமான “SAEEDA FOUNDATION” நிறுவனத்தின் இலங்கை இணைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸி விசேட அதிதியாக கலந்து சிறப்பிப்பார். மேற்படி நிறுவன இலங்கை இணைப்பாளர் நௌஸர் பௌஸியிடம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊர் பிரமுகர்கள் விடுத்த வேண்டுகோளின்பேரிலேயே மேற்படி மூன்று மாடி கட்டடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட கல்வித்திணைக்கள பணிப்பாளர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மேற்படி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேருவளை பொல்கொட்டுவ ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம் மற்றும் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் நெளஸர் பௌஸி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
(அஜ்வாத் பாஸி)