ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வட பகுதியில் உள்ள நகரான துல்கரமில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பு தேடுதலில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நேற்று (24) இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 21 வயது ஆசித் அபூ அலி மற்றும் 32 வயது அப்துர்ரஹ்மான் அபூ தகேஸ் என்ற இருவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது உடைமைகளுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
போராட்டக் குழுவின் கட்டளை மையம் மற்றும் கட்டடம் ஒன்றில் இருந்த ஆயுதக் கிடங்கு வசதியை அழிப்பதற்காகவே நூர் ஷம்ஸ் அகதி முகாமுக்கு சென்றதாக இஸ்ரேல் இது பற்றி விளக்கம் அளித்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் இதே அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் 21 வயதான அயத் சமிஹ் காலித் அபூ ஹர்ப் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றுவளைப்புகள் அதிகரித்துள்ளன. பலஸ்தீன போராட்டக் குழுக்களை களையறுப்பதற்கும் எதிர்கால தாக்குதல்களை முறியடிப்பதற்கும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.
கடந்த ஜூலையில் ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் ஒன்றாக ஜெனின் அகதி முகாமில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
பஸ்தீனர்களின் உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட 2006 தொடக்கம் அதிக பலஸ்தீனர்கள் உயிரிழந்த ஆண்டாக இந்த ஆண்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆம்பித்தது தொடக்கம் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடுகளில் 200க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பிரிவில் பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் குறைந்தது 35 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.